Tuesday, August 27, 2024

" சோழர் கால நிலவுரிமை "

சோழர் காலத்தில் நிலங்கள் அனைத்தையும் பார்ப்பனர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார்கள் என்ற கூக்குரல் அவ்வப்போது எழுவதும் .. நாமும் பதில் சொல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.




இப்போது மீண்டும் அதே குரல். மீண்டும் அதே பதில்.
குறிப்பாக..
தஞ்சை கருந்திட்டாக்குடி கல்வெட்டு. பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சாதியினரின் நிலங்களை பறித்து குந்தவையார் பார்ப்பனர்களுக்கு கொடுத்தாராம்.
இச் செய்தியில் இரண்டு திருத்தம். குந்தவை நாச்சியார் நிலங்களைப் பறிக்கவில்லை. காசு கொடுத்து வாங்கினார். பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவில்லை. கோவிலுக்கு கொடுத்தார்.
இது தவறான செயல்தானே என்று கேட்பவர்களுக்கு பதில்
இப்பதிவின் முடிவில்.
இதேபோல்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயத்தை ரத்து செய்து அதை தேவதானமாக மாற்றி கோவிலுக்கு கொடுத்த ஆவணம்தான் திருவாலங்காடு செப்பேடு.
ஆக..
குந்தவை .. ஊர்சபைக்குச் சொந்தமான நிலங்களை காசு கொடுத்து வாங்கி அதை விளக்கெரிக்கும் தானமாகக் கோவிலுக்குத் தருகிறார்.
இராஜேந்திரசோழன்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயத்தை ரத்து செய்து அவர்களின் நிலங்களை தேவதானமாக மாற்றி திருவாலங்காடு மகாதேவர் கோவிலுக்குக் கொடுத்தார்.
மேற்கண்ட இரண்டு செய்தியின் சாரத்தை முழுமையாக அறிவதற்கு முன் சோழர்கால நிலவுடமை பற்றிய செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தது என்பது முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்.
அவ்வாறு இல்லை. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதிமங்களம் பற்றிய செய்திகளை மட்டும் திரும்ப திரும்பக் கூறி ஒரு பொய் பிம்பத்தை கட்டமைத்துள்ளனர்.
யாருக்கெல்லாம் நில உரிமை இருந்தது...?
பரம்பரை பரம்பரையாக ஒரு நிலத்தின் உரிமையை பெற்றவர்கள் வெள்ளான் குடிகள் ஆவார். இவர்களது நிலம் முழுக்க முழுக்க இவர்களது உரிமை. கல்வெட்டில் தங்கள் காணி என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் குறிப்பிடுவர்.
சிறு நிலம் வைத்திருப்போர் முதல் பெரும் நிலக்கிழார் வரை இப்பிரிவில் அடங்குவர். இவர்களது நிலத்தின் விளைச்சலுக்கேற்ப அரசுக்கு வரி செலுத்துவார்கள். இவர்கள் இறைகுடிகள் என்றும் கல்வெட்டு குறிப்பிடும். இவர்கள் விருப்பம் போல் தங்கள் நிலத்தை யாருக்கும் விற்பனை செய்ய முழு உரிமையுண்டு.
அதேபோல் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விருப்பம் போல் தானம் செய்யவும் உரிமையுண்டு.
சிறு நிலம் வைத்திருப்போர் தாங்களே உழுதுகொள்வார்கள். பெரும் நிலம் வைத்திருப்போர் வேலைக்கு ஆட்கள் வைத்திருப்பர். இந்த வெள்ளான் குடிகள்தான் பெரும்பாலும் தன் உரிமையுடைய நிலவுரிமையாளர் ஆவார்கள்.
அரசும் ..
ஊர்சபையும் ..
வசதிபடைத்தோரும் ..
நிலங்களை வெள்ளான் குடியினரிடமிருந்து காசு கொடுத்து வாங்கி அவற்றை வரிநீக்கி கோவிலுக்கோ மற்ற காரியங்களுக்கோ தானம் செய்வார்கள்.
இனி..
இறையிலி எனப்படும் வரியில்லா நிலங்கள் பற்றிப் பார்ப்போம்.
தேவதானம் என்பது சிவன் கோவிலுக்குத் தானமாக வழங்கபட்ட நிலம். அந்நிலத்தின் இறை வருவாய் அனைத்தும் அரசை சேராமல் கோவில் பணிகளுக்குப் பயண்படும்.
திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்குத் தானமாக வழங்கபட்ட
இறையிலி நிலம்.
பள்ளிச் சந்தம் என்பது பௌத்த மற்றும் சமணர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம்.
அய்யன் போகம் என்பது
கிராமத்தில் இருக்கும் சாஸ்தா என்னும் ஐயனார் கோவில் இறையிலி நிலம்.
மடப்புறம் என்பது மடங்களுக்காக கொடுக்கப்பட்ட நிலம்.
சாலாபோகம் என்பது அறச்சாலை மற்றும் உணவுச்சாலைக்காக கொடுக்கப்பட்ட இறையிலி நிலம்.
அர்ச்சனா போகம்.
சிவன் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
அம்பலப்புறம்.
கிராமசபை கூடும் மண்டபத்தின் நிர்வாகச் செலவுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
வெட்டி பேற்றூர்.
ஊர் பொது அலுவலனுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்.
வைத்தியபோகம் என்பது மருத்துவம் பார்க்கும் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் இறையிலி.
அரசு அதிகாரிகள் மற்றும் வேலையாட்களுக்கு
போகம், விருத்தி, காணிபேறு, புறம், பட்டி, என்ற பெயர்களில் இறையிலி நிலங்கள்.
நிருத்தபோகம் என்பது விழாக்காலங்களில் கூத்து நடத்துபவர்களுக்காக வழங்கப்பட்ட இறையிலி நிலம்.
மகாபாரம் படிக்க பாரத விருத்தி. வேதம் படிக்க பட்டவிருத்தி.
கோவில்களில் தேவார திருமுறைப் பதிகங்கள் பாடுவோருக்கு திருப்பதிக காணி என்ற பெயரில் இறையிலி நிலம்.
கணக்கெழுதும் அலுவலர்களுக்கு கணக்கக்காணி.
தேவரடியார் பெண்களுக்கு பதியிலார்காணி.
நடனம் சொல்லித் தரும் ஆசிரியனுக்கு நட்டுவக்காணி.
பாணர்களுக்கு பாணக்காணி.
கோவில்களை கூட்டி சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு மெழுகுப்புறம்..
போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதிரப்பட்டி.
அறச்செயல் புரிவோருக்கு வழங்கப்படும் அறப்புறம்.
ஏரி போன்ற நீர் நிலைகளை பராமரிப்பு செய்து பாதுகாப்போருக்கு ஏரிப்பட்டி.
அரசுக்கு பணி செய்யும் பார்ப்பனச்சேரி, பறைச்சேரி,
அரசு உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஏகபோகம் மற்றும் சீவிதம்.
இன்னும் நிறையவே உள்ளன.
மேற்கண்ட நிலங்கள் அனைத்தும் வரியில்லா இறையிலி நிலங்களாகும்.
இந்த வரிசையில்தான் பிராமணர்களுக்கு வழங்கப்படும் பிரம்மதேயம். நான்கு வேதங்களை கற்ற பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்களம் என்ற பெயரில் இறையிலி நிலங்கள் வழங்கப்பட்ட்டன.
ஏராளமானப் பணியாளர்களின் வரிசையில்தான் பிராமணர்களுக்கும் வரியில்லா நிலங்கள் வழங்கப்பட்டன.
பிராமணர்களுக்கு மட்டும் நிலதானம் என்பது வரலாற்றுப் பொய்.
சதுர்வேதி மங்கள கல்வெட்டுகளை மட்டும் காட்டி இப்படி ஒரு பொய் பிம்பம் வலிந்து கட்டமைக்கப்படுகிறது.
மற்றப் பணியாளர்களுக்கான இறையிலி நில கல்வெட்டுத் தரவுகள் ஏராளமாக உள்ளன.
கோவில் பணி.
அறச் செயல். வேதம் வாசித்தல். நல்ல நாள் குறித்தல். ஆலோசனை வழங்குதல். கோவில் நிர்வாகம். நிவந்தங்களை சரிபார்த்தல். விழாக்களை ஏற்பாடு செய்தல் இம்மாதிரியான பணிகள் செய்த பிராமணர்களுக்கு
வருவாயாக இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டன.
ஆக..
மேற்கூறிய அனைத்து இறையிலி நிலங்களும் அரசு மற்றும் ஊர்சபைக்கு சொந்தமான நிலம்.
வெள்ளான் வகை என்பது முழுக்க தனிநபருக்கு உரிமையான நிலம்.
இறையிலி நிலம் என்பது..
அரசால் வழங்கபட்ட வரியில்லா நிலம். நிலத்தைப் பெற்றோர் தங்களது நிலத்தில் தாங்களே உழுது பயிர்செய்வோர் மீயாட்சி என்றும்.. மற்ற ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் கொடுத்தால் பயிரிடும் உழு குடிகளின் உரிமை காராண்மை என்றும் கலேவெட்டில் குறிக்கப்படுகிறது.
காணியாட்சி என்னும் ஒரு வகை நிலம் உண்டு. கோவிலில் பணி செய்யும் ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிலம். இந்நிலம் கோவிலால் தானமாக வழங்கப்பட்டது என்றாலும் இது இறையிலி நிலம் அல்ல. காணியாட்சி நிலத்திற்கு வரி உண்டு.
இவ்வரியின் பெயர் காணிக்கடன்.
பிரம்மதேயம் என்பது பிராமணர்களின் இறையிலி நிலம். அதன் கீழ் உள்ள காணி என்பது கோவில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்.
மேற்கூரிய செய்திகள் அனைத்தையும் நினைவில் வைத்து .. இவர்கள் குறை கூறும் ஒரு கல்வெட்டு செய்தி. அதையொட்டிய ஒரு செப்பேடு .. இரண்டையும் பார்ப்போம்.
தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை என்னும் ஊரில்
வசிஷ்டேஸ்வரர் கோவில் கல்வெட்டு. இராஜராஜனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் கருந்திட்டாங்குடி ஊர்சபையில் பிராமணர் மற்றும் அதன் கீழ் உள்ள மற்ற சாதியினரின் காணி செய்வார் நிலங்களைத்தவிர. . காணியாட்சி பெற்று அதன் உடையவர் இல்லாமல் பணி செய்ய முடியாமல் ஊர்சபை கட்டுபாட்டில் உள்ள காணி நிலத்தை காசு கொடுத்து வாங்கி மகாதேவர் கோவிலுக்கு விளக்கெரிக்கத் தானமாகக் கொடுக்கிறார்.
இதுதான் கல்வெட்டு செய்தி.
இக் கல்வெட்டுச் செய்தியை தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுத் தொகுதியில் பதிப்பித்தவர்கள் கல்வெட்டுக்கு முன்னொட்டாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
"குறிப்புரை:
முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் பிராமண ஊர்களில் பிரமதேயம் மற்றும் பிற ஜாதிகளைச் சார்ந்தவர்களில் காணியாகப் பற்றிருந்த நிலம் ஆகியவற்றைத் தவிரப் பிறரின் நிலங்களைக் கட்டாயமாக விற்றுத் தரும்படி மன்னன் ஆணையிட சாத்தம்பி என்ற அரிகாரி எண்பத்து ஒன்றரையே மூன்று மா அரைக்காணி நிலத்தை கையகப்படுத்தி பிரமதேயம் மூலமாக மன்னன் இராஜராஜ சோழனின் சகோதரி ஸ்ரீகுந்தவைப்பிராட்டியார்க்கு விலைக்கு விற்ற செய்தியும் அவர் அந்நிலங்களைக் கோயிலுக்கு நொந்தா விளக்கெரிப்பதற்குக் கொடையளித்த செய்தியும் காணப்படுகிறது."
மேற்கண்ட செய்தியில்
இரண்டு விடயங்கள் கல்வெட்டில் இல்லை.
கட்டாயமாக விற்றுத் தரும்படி என்ற சொல் கல்வெட்டில் இல்லை.
மன்னரின் உத்திரவுதான் நிறைவேற்றப்படுகிறது.
நில உரிமையுள்ள எவர் ஒருவர் நிலமும் விற்கப்படவில்லை.
பிறரின் நிலங்களும் விற்கப்பட்டத் செய்தியும் இல்லை. ஊர் சபைக்கு சொந்தமான காணியாட்சி நிலம்தான் விற்கப்பட்டது. " மகா சபையோர் விற்றுக் கொடுத்த நிலம் " என்று தெளிவாகக் கல்வெட்டில் வருகிறது.
( கல்வெட்டு வாசகம் இணைப்பில்)
இந்தக் கல்வெட்டின் மிகச் சரியான விளக்கத்தை வரலாற்று அறிஞர்
திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தான் எழுதிய தஞ்சாவூர் நூலில் பதிவு செய்கிறார்.
"மன்னன் முதலாம் இராசராச சோழன்.
காலம் : 17ஆவது ஆட்சியாண்டான கி.பி. 1002
செய்தி: நித்தவிநோத வளநாட்டு, நல்லூர்நாட்டுப் பிரமதேயமான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து (தற்போது இவ்வூர் பாபநாசம் வட்டத்தில் இராசகிரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) ஊர்ச்சபையார் மாமன்னரின் ஆணைப்படி, அவருடைய சகோதரி குந்தவைப்பிராட்டி பெயரில் கருந்திட்டைக்குடி மகாதேவர் கோயிலுக்காக விற்றுக் கொடுத்த நிலை யாவணம்.நல்லூர்நாட்டுப் பிரமதேய கிராமங்களில் பிராமணர்களுக்குக் கீழ்ப்பட்ட சாதியினர்
குறிப்பிட சில பணிகளுக்காக முன்பு காணியாகப்பெற்று அனுபவிக்கும் நிலங்களில்
தற்போது குறிப்பிட்ட அப்பணிகளைத் தவறாமல் செய்து கொண்டு அவ்வுரிமையால்
அனுபவிக்கப்பெறும் நிலங்களைத் தவிர, பணியாளர்கள் இல்லாமல்
ஊர்ச்சபையினரிடமுள்ள நிலங்களை விற்குமாறு, இராசராசன் ஆணையிட, இதனை அதிகாரிகள் வானவன் மூவேந்த வேளாரும், சாத்தம்பியாரும் நிறைவேற்ற, இராஜகேசரி
ஊர் மகாசபையினர் விற்றனர்.
இவ்வாறு விற்கப்பட்ட நிலத்தைக் குந்தவைப் பிராட்டியார் விலை கொடுத்து வாங்கி, தஞ்சாவூர்ப் புறம்படி வடவாற்றில் வடகரை, கருந்திட்டைக்குடி இறைவற்கு நுந்தாவிளக்கு எரிப்பதற்காக அளித்தார்.
இராஜேகேசரி சதுர்வேதிமங்கலத்துச் சபையினருக்காக இந்த ஆவணத்தில் அவ்வூர் மத்தியஸ்தன் திருவேங்கடவன் ஆயர்கொழுந்தினனும் மற்றும் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு வாங்கப்பட்ட நிலத்தின் வருவாயைக் கொண்டு இராசராச சோழனின் 17ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1002 இலிருந்தே நுந்தாவிளக்கு எளிப்பதற்காகக் கொடுத்தேன் என்றதை ஆவணமாக எழுதியது குந்தவை நாச்சியாரின் அதிகாரிகளான தென்னவன் எரியூர்நாட்டு வேளான், நாகமங்கிழான், பூவனூருடையான் வரகுணன், மருதங்குடையான் மயிலாட்டி ஆச்சன் ஆகியவர்கள் ஆவர்."
( தஞ்சாவூர் நூல்.
பக் 124. குடவாயில் பாலசுப்ரமணியன்)
இதுதான் இந்த கல்வெட்டின் சரியான விளக்கம்.
ஆனால்..
பார்ப்பனர்களின் பிரம்மதேயம் ரத்து செய்யப்பட்ட தகவலும் உண்டு.
திருவாலங்காடு செப்பேடு.
செயங்கொண்ட சோழமண்டலத்தில் மேன்மலை பழையனூர் சிங்களாந்தக சதுர்வேதி மங்கலத்தில் உட்பட்ட பிரம்மதேய பழையனூரை வெள்ளான் வகை கிராமமாக மாற்றி திருவாலங்காடு மகாதேவருக்கு தேவதானமாக அளிக்கப்பட்டது. இதுவரை பிரம்மதேய வருவாயாகக் கிடைத்த
ஆண்டுக்கு
3238 கலம் நெல்..
193 கழஞ்சு தங்கம் ..
கோவிலுக்கு வருமானமாக கிடைத்தது.
ரத்து செய்யப்பட்ட பழையனூர் ஊர்சபைக்குப் பதிலாக
மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதிகொடுக்கப்பட்டது.
இறுதியாக...
சோழர்கள் குடிமக்களின் நிலங்களை பறிமுதல் செய்து பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள் என்று ஒற்றை வரியில் எழுதிவிடுகிறார்கள்.
அவ்வாறு இல்லை என்று மறுத்து பதிவிட நாம்தான் பக்கம் பக்கமாக எழுதவேண்டியுள்ளது.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( Reference ..
தஞ்சாவூர்.
குடவாயில் பாலசுப்ரமணியன்.
சோழர் செப்பேடுகள்.
முனைவர் க.சங்கரநாரயணன்)

No comments:

Post a Comment

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...